புதுடெல்லி: பிரபல திரைப்பட நடிகையும் முன்னாள் எம்.பியுமான ஜெயபிரதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் கட்சி பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் அவர் சேர்ந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடியின் ஆட்சி நிர்வாகத்தால் ஈர்க்கப்பட்டு, பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், தான் கலைக்காகவும், அரசியலுக்காகவும் தன்னால் முடிந்த பணிகளை இதுவரை செய்து வந்துள்ளதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட தற்போது தேசிய கட்சியான பாரதிய ஜனதாவில் இணைந்து இருக்கிறேன் எனக் கூறினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஜெயபிரதா கடந்த 1994ல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அங்கிருந்து விலகிய ஜெயபிரதா முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
அந்த கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். கடந்த 2014-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைவர்களுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெயப்பிரதா ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் இணைந்து சிறிது காலம் செயல்பட்டார். அப்போது, உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் 2 முறை நாடாளுமன்றத்திற்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். எனவே ராம்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக ஜெயபிரதா மீண்டும் களமிறங்குவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சின் நம்பிக்கைக்குரிய வேட்பாளர் அஜாம் கான் களம் காணுகின்றார். அவரை எதிர்த்து போட்டியிட பலம் வாய்ந்த வேட்பாளரை பாஜக தேடி வருகின்றது. இந்நிலையில் தற்போது இந்த இடத்தில் ஜெயபிரதா போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி