டெல்லி: மக்களவை தேர்தலில் அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்க பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டிடிவி தினகரனின் அமமுகவை சுயேச்சையாகக் கருதி பொதுச் சின்னம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.இதனால் அமமுக-வுக்கு பொதுச் சின்னம் ஒதுக்குமாறு பிறப்பித்த உத்தரவை பிற வழக்குகளுக்கு முன்னுதாரணமாகக் கருதக் கூடாது என்று கூறி தேர்தல் ஆணையம் கோரிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் வைத்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னதாக மக்களவை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவு-க்கு குக்கர் சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அமமுகவு-க்கு பொது சின்னங்களில் ஒன்றை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலத்தை கருத்தில் கொண்டு வரும் தேர்தல்களில் பொது சின்னம் வழங்குவதை தேர்த்ல ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மக்களவை தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தினகரன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. டிடிவி.தினகரன் சார்பில் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி தனது வாதத்தை முன் வைத்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் குக்கர் சின்னம் வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது சுயேச்சைகளுக்கு ஒதுக்குவது போல பொது சின்னங்களில் ஒன்றை டிடிவி கட்சிக்கு ஒதுக்குங்கள் என தலைமை நீதிபதி யோசனை தெரிவித்தார். ஏனெனில் ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் அவருக்கு அடையாளம் அவரது சின்னம் தான். எனவே வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த பிறகு டிடிவி கட்சிக்கு பொதுவான சின்னம் ஒன்றை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாமே என்றார்.
ஆனால் விசாரணையின் போது வாதிட்ட தேர்தல் ஆணையம், அமமுக சார்பில் போட்டியிடுவோர் அனைவரும் சுயேச்சைகள் என்பதால் பொதுசின்னம் ஒதுக்க முடியாது என கூறியது. அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னம் ஒதுக்க முடியாது. மாறாக தனித் தனி சின்னமே ஒதுக்க முடியும் என வாதிட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒருவருக்கு தருமாறு ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? என கேள்வி எழுப்பினார். ஒரு அரசியல் கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும் என வழக்கறிஞர் கபில் சிபல் பதில் அளித்தார். இருப்பினும் தனது வாதத்தில் பிடிவாதமாக இருந்த தேர்தல் ஆணையத்தின் கருத்துகளை ஏற்ற உச்சநீதிமன்றம் டிடிவி-க்கு குக்கர் சின்னம் வழங்க மறுத்து விட்டது.
அதே சமயம் ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல்வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். எனவே டிடிவி அணிக்கு பொது சின்னம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தினகரன் தரப்புக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும். 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 19 இடைத்தேர்தலுக்கும் ஒரே சின்னத்தை அவரது அணிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டிடிவி தரப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை முன் மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை மற்றும் பொதுச்சின்னம் குறித்த உத்தரவை மற்ற வழக்குகளுக்கும் முன்னுதாரணமாக கருத கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி