ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16-வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி, நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை கடந்த 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இதனையடுத்து தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். அதன்படி, ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணியாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் பாலமு தொகுதியை ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு ஒதுக்க காங்கிரஸ் ஒப்புக் கொண்டது. ஆனால் அதற்குப் பதிலாக சத்ரா தொகுதியை தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அந்தத் தொகுதியில் ஏற்கனவே ராஷ்ட்ரிய ஜனதா தளம் இருமுறை வெற்றி பெற்றுள்ளதால் அதனை கொடுக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி