×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் : பார் நாகராஜனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பார் நாகராஜனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பொள்ளாச்சி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி நக்கீரன் கோபால், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பினர். அவர்கள் கடந்த 25ம் தேதி ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.  

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசரின் நெருங்கிய நண்பரான பார் நாகராஜன் மற்றும் தென்றல் மணிமாறனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இவர் மீது புகார் கொடுத்த பெண்ணின் குடும்பத்தை தாக்கியதாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பார் நாகராஜன் வரும் 28ம் தேதிக்குள் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ் மற்றும் சபரி ராஜன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய மேலும் பல நபர்களுக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளனர். பார் நாகராஜனும், தென்றல் மணிமாறனும் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்த திருநாவுக்கரசுடன் ஃபேஸ்புக் நண்பர்களாக உள்ள புகைப்படங்கள் வெளியான நிலையில் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,Barak Nagarajan ,CBCI Sammon , Pollachi sexual abuse, bar nagarajan, cbcit Sammon
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...