சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிர்ச்சி அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், ப.சிதம்பரம் மீது கடும் தாக்குதல் தொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சுதர்சன நாச்சியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிப்பை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் எதிர்பாராவித நிகழ்வு ஏற்பட்டு உள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் வருங்கால பிரச்னைக்கு இது காரணமாக அமைந்து விடுமோ என்று தோன்றுகிறது.
நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வருவதை ப.சிதம்பரம் தடுத்திருக்கிறார்.
அமைச்சராகவும் கட்சியில் பல பொறுப்புகளை கிடைக்கவிடாமல் தடுத்து உள்ளார். நான் அவரை தோற்கடித்தேன் என்பதை நினைவில் வைத்து செய்து கொண்டிருக்கிறார். எனக்கு காங்கிரஸ் கட்சி மீதும் சிவகங்கை மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. சிவகங்கை மக்களுக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் என்னுடைய பணியை தொடர்ந்து செய்வேன். ப.சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுக்கின்றனர். நாடாளுமன்ற தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. பல நாடுகளில் ப.சிதம்பரம் குடும்பம் சொத்துக்களை சேர்த்து உள்ளது. ஒரு குற்றவாளியாக உள்ளதால் நீதிமன்றத்தில் என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை. நீதிமன்றத்திற்கு போக வேண்டியவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிறார் என்று காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட போகிறது என்பது கஷ்டமாக உள்ளது.இவ்வாறு கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி