×

ரயில்வே பணிகளுக்கு 30% லஞ்சம் கேட்கும் அமைச்சர்: தேனியில் ஈவிகேஎஸ். இளங்கோவன் திடுக் தகவல்

தேனி: ரயில்வே பணிகளை செய்ய ஒரு அமைச்சர் 30 சதவீதம் லஞ்சம் கேட்பதாக தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்  கூறினார். தேனியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேனி மாவட்டத்தில் மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகல ரயில்பாதையாக  மாற்றுவதாக கூறி ஓடிக்கொண்டிருந்த ரயிலையும் நிறுத்தி விட்டனர்.  இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டாலும், பணிகளை எடுக்கும் கான்ட்ராக்டர்கள்  சில நாட்களிலேயே ஓடிவிடும் நிலை உள்ளது. இதுபற்றி எனக்கு தெரிந்த ஆந்திர மாநிலத்தை கான்ட்ராக்டரிடம் கேட்டேன். இதற்கு அவர், ‘தேனியை  சேர்ந்த ஒரு அமைச்சர் ரயில்வே பணிகளை செய்ய 30 சதவீதம் வரை லஞ்சமாக கேட்கிறார்.

இதனால்தான் பணிகள் நடக்கவில்லை’ என்றார். நான் வெற்றி பெற்றால் ஆறே மாதத்தில் போடி - மதுரை ரயில் சேவையை பயன்பாட்டிற்கு  கொண்டு வருவேன். இலங்கை தமிழர் பிரச்னையை அதிமுகவினர்  புரிந்து கொள்ளாமல் பேசுகின்றனர். இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் பகுதியில்  சுமார் 300 கிமீ தூரத்திற்கு சாலை வசதி அமைத்து கொடுக்கப்பட்டது. அங்குள்ள தமிழர்கள் ஒரு லட்சம்  பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. என்னை தொகுதிக்கு புதியவர் என்று சொல்கின்றனர். நான் நடிகன் இல்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து நடக்க பாடுபட்ட  பெரியாரின் பேரன் நான். இந்த தேர்தலில் சிலர் லஞ்சப்பணத்தை வைத்துக்கொண்டு ஓட்டுக்கு 500, 1000,  5 ஆயிரம் கொடுக்க நினைக்கிறார்கள். நான்  பணத்தை நம்பி நிற்கவில்லை. தேனி மக்களை நம்பி போட்டியிடுகிறேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : EVNs , Railway Work, Bribery, Minister, Theni, EVKS. Illangovan
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.5-ல் வெளியீடு