×

பெட்ரோல் குண்டு வீசி ஜிஜிஆர் மகன்களை கொல்ல முயற்சி ரவுடி குப்பன் கூட்டாளிகளுக்கு போலீசார் தீவிர வலைவீச்சு: வேலூரில் நள்ளிரவு பரபரப்பு

வேலூர்: வேலூரில் ஜிஜி.ரவியின் மகன்களின் கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்ற ரவுடி குப்பன் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் பாபுராவ் தெருவைச் சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவருக்கும் ரவுடி மகாவுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோட்டப்பாளையத்தில் ஜி.ஜி.ரவியை கொல்ல முயன்றபோது, ரவுடி மகாவை ஜி.ஜி.ரவியின் மகன்கள் கோகுல், தமிழ்மணி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டவர்கள் அடித்து கொலை செய்ததாக வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து கைது செய்தனர். ரவுடி மகாவின் கூட்டாளியான குப்பன், மகாவின் கொலைக்கு ஜி.ஜி.ரவியின் குடும்பத்தை பழிவாங்க முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆண்டு காட்பாடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.ஜி.ரவியை, குப்பன் கூலிப்படையை வைத்து கொலை செய்தார். இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.செல்வத்தை குப்பன் தனது நண்பர்கள் மூலம் கொல்ல முயன்றனர். ஆனால் ஜி.ஜி.செல்வம் தப்பினார்.

இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் ஜி.ஜி.ரவியின் மகன்கள் கோகுல், தமிழ்மணி ஆகியோர் தனது நண்பர்கள் 4 பேருடன் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம கும்பல், திடீரென இந்த கார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் காரின் முன் பகுதி தீப்பற்றி எரிந்தது. மேலும் அங்கிருந்த மற்றொரு கார் மீதும் தீ பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரில் இருந்து தப்பித்து அங்குள்ள விடுதியில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வடக்கு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற கும்பல் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பகுதியில் நின்றிருப்பதாக கோகுலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோகுல் மற்றும் அவரது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டர்வகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீது அங்கிருந்த எதிர்தரப்பினர் 30க்கும் மேற்பட்டவர்கள், மதுபாட்டில்களை வீசி தாக்கி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கோகுல், தமிழ்மணி அவரது நண்பர்கள் அப்பகுதியில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் குடியிருப்பில் பதுங்கிக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த எதிர்கோஷ்டியினர் அந்த குடியிருப்புக்குள் புகுந்து, மதுபாட்டில்கள், கற்களை வீசி சராமரியாக தாக்கி சூறையாடினர். அதிர்ச்சியில் உறைந்த அங்கிருந்த செக்யூரிட்டி உடனடியாக வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் அங்கிருந்த கார், பைக், கதவு மற்றும் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துவிட்டு தப்பினர். இதையடுத்து டாக்டர்கள் குடியிருப்பில் பதுக்கி இருந்த கோகுல், தமிழ்மணி ஆகியோரை பாதுகாப்பாக போலீசார் அழைத்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சில் சேதமான கார்களை பார்வையிட்டார். கலவரம் போல் சாலைகளில் பாட்டில்கள், கற்கள் இருந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த சம்பவத்தால் வேலூர் சாரதி மாளிகை, மண்டி தெரு, ஆற்காடு சாலையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டது. இதுதொடர்பாக வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: முன்விரோத பகையால்தான் இந்த சம்பவ நடந்துள்ளதாக முதற்கட்ட விசரணையில் தெரியவந்துள்ளது. ரவுடி குப்பன் கூட்டாளிகள் தோட்டப்பாளையத்தில் உள்ளனர். அந்த கும்பலை சேர்ந்தவர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்யும் நடந்து வருகிறது. மேலும் சில ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. ஜிஜி ரவியின் மகன்களுக்கு கன்னியகுமாரியை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இருக்கும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தீப்பிடித்த காரில் இரும்பு ராடுகள், கத்தி போன்ற ஆயுதங்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : allies ,Cuban ,GIG ,sons ,Vellore , Petrol bomb, GGR's son, trying to kill, Rowdy Kuban's partner
× RELATED உண்மையைச் சொன்னதால் இந்தியா கூட்டணி...