சென்னை: திருமண வரவேற்புக்கு தரமற்ற கோட் விற்பனை செய்த பிரபல துணி கடைக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனியார் மருந்து நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு வழக்கறிஞர்கள், டாக்டர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் என பலர் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்காக விருந்து, திருமண மேடை என அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்துள்ளனர். மேலும் திருமண விழாவில் அணிவதற்காக, பிரபல துணி கடையில் கோட் சூட் வாங்க சென்றுள்ளார். துணி எடுத்து அங்கையே தைக்க கொடுத்துள்ளார். அதற்காக ரூ.10,500 செலுத்தியுள்ளார்.
பின்னர், கோட்டை அணிந்து பார்த்தபோது கை இருக்கமாக இருந்துள்ளது. இதுகுறித்து துணி கடை மேலாளரிடம் தெரிவித்தபோது, அவர் சரி செய்வதாக கூறியுள்ளர். ஆனால் சுப்பிரமணி திருமணத்திற்கு அந்த கோட்டை அணிந்தபோது கை பகுதியில் கிழிந்துள்ளது. இதனால் வெறும் சட்டையுடன் நின்றுள்ளார். இது சுப்பிரமணிக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், கடை நிர்வாகத்திடம் இருந்து உரிய இழப்பீடு வாங்கி கொடுக்கும்படி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி லக்ஷ்மிகாந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், துணிக்கடை செயலால் சுப்பிரமணியத்துக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால், கடை நிர்வாகம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியத்துக்கு ரூ.80 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி