×

மக்களவை, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மனுதாக்கல் நாளை முடிகிறது: இதுவரை 326 பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதி, 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வது நாளையுடன் முடிவடைகிறது. இதனால், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள்  சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதை தொடர்ந்து நாளை மறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான  வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்படுகிறது.  இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் தமிழகத்தில் மக்களவை தொகுதிக்கு 254 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 29 பேர் பெண்கள்.  அதேபோன்று 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், இரண்டு நாட்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. 2 நாட்களுக்கு பிறகு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்  என்பதால் இன்று அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பலர் ஏற்கனவே வேட்புமனு  தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று திமுக, அதிமுகவில் வேட்புமனு தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர்  மனு தாக்கல் செய்கின்றனர். குறிப்பாக, தூத்துக்குடியில் கனிமொழி உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் இன்று  வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அதே போன்று, திருச்சியில் திருநாவுக்கரசர், கன்னியாகுமரியில் எச்.வசந்தகுமார், தேனியில் ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களும், ஈரோடு தொகுதி மதிமுக  வேட்பாளர் கணேசமூர்த்தி, சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் உட்பட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். மேலும், அதிமுக  மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா உள்ளிட்ட பாஜ வேட்பாளர்களும் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். மேலும், சட்டசபை தொகுதியில்  போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரும் இன்று மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அமமுகவிற்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. எனவே, நாளை  அமமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் சுயேச்சை வேட்பாளர்கள் என அதிகம் பேர் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

இதை தொடர்ந்து நாளை மறுதினம் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. அப்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் சரிதானா என்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். இதையடுத்து அவர்களது வேட்பு  மனுக்கள் ஏற்கப்படுகிறது. இதை தொடர்ந்து, 29ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.இன்று அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்பதால் அனைத்து மண்டல அலுவலகங்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* நாளை மறுதினம் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது.
* 29ம் தேதி மாலை 3 மணி வரை  மனுக்களை வாபஸ் பெறலாம்.
* அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha ,Legislative Assembly , Lok Sabha, 18 legislative , tomorro, far
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்கா மூடப்படும்..!!