கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் பாஜ 14 இடங்களில் போட்டியிடுகிறது.தொடக்கம் முதலே திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய 2 தொகுதிகளுக்கு பா.ஜ. தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதில் திருவனந்தபுரத்தில் கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுவது உறுதியானது. அடுத்ததாக பத்தனம்திட்டா தொகுதிக்கு தான் கடும் போட்டி நிலவியது. சபரிமலை போராட்டத்தை முன்நின்று நடத்திய மாநில பொது செயலாளர் சுரேந்திரன், கடந்த முறை போட்டியிட்ட பொது செயலாளர் எம்.டி.ரமேஷ், மாநில தலைவர் தரன் பிள்ளை, மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் ஆகியோர் இந்த தொகுதிக்கு குறி வைத்தனர்.
இவர்கள் அனைவருமே தங்களுக்கு பத்தனம்திட்டா தொகுதி வேண்டும் என கூறி பாஜ தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் கேரளாவில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிறகும் பாஜ.வால் அவர்களை வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. இறுதியில் கடந்த வியாழனன்று இரவு டெல்லியிலிருந்து தேசிய அளவில் போட்டியிடும் 184 வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. கேரளாவில் பாஜ போட்டியிடும் 14 தொகுதிகளில் 13 இடங்களில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. அதில் பத்தனம்திட்டா மட்டும் அறிவிக்கப்படவில்லை.
இங்கு மாநில பொதுசெயலாளர் சுரேந்திரன் போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான தொண்டர்கள் விரும்பினர். ஆனால் ஒரு குறிப்பிட்ட ஒரு சாதி அமைப்பு, தரன் பிள்ளைக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என விரும்பியது. இந்நிலையில் பத்தனம்திட்டா வேட்பாளராக சுரேந்திரனை பா.ஜ நேற்று அறிவித்தது. இதன் மூலம் இங்கு நிலவிய சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி