சென்னை: தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் திடீரென மாயமானதாக பரவிய தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி மையம் உள்ளது. இங்கு தினமும் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக சென்ற விமானம் ஒன்று திடீர் என மாயமானதாக தகவல் பரவத் தொடங்கியது. இதனால் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தள அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டனர்.பின்னர் விமானம் மாயமானது உண்மையா என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் விமானங்களை வழிமறித்து விரட்டிச்சென்று சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் ஓட்டிய விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் அவர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லையில் தரையிறங்கினார். அதுபோல் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக விமானிகளை எப்படி மீட்பது, கட்டுப்பாட்டு அறை மூலம் விமானி விழுந்த இடத்தின் அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்பு துறை, மருத்துவம், உள்ளாட்சித்துறை போன்றவற்றுக்கு எப்படி தகவல் அனுப்புவது என்பது குறித்து விமானிகளுக்கு பயிற்சி ஒத்திகை நடந்தது. இதுபற்றி தெரியாத சிலர் விமானம் மாயமாகிவிட்டது என வதந்திகளை பரப்பி விட்டார்கள் என தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி