சென்னை: திருச்சி அல்லது தேனி தொகுதியை கேட்டு வந்த நடிகை குஷ்புக்கு சீட் வழங்கப்படவில்லை. தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பு சேர்ந்ததும், அகில இந்திய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். இவர், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட விரும்பினார். இதனால் திருச்சி உள்ளிட்ட எந்த தொகுதியில் சீட் கொடுத்தாலும் தன்னால் வெற்றி பெற முடியும் என்று கூறினார். இதற்காக மேலிடத்திலும் நெருக்கடி கொடுத்து வந்தார். திருச்சியில் திருநாவுக்கரசருக்கு ஒதுக்கிவிட்டதாக மேலிடம் கூறியது. மேலும் அவரை மாநிலத்தலைவர் பதவியில் இருந்து நீக்கியபோது, திருச்சி சீட் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாக மேலிடம் கூறியது.
இதனால் இளங்கோவனுக்கு விருதுநகரும், தனக்கு தேனி தொகுதியையும் ஒதுக்க வேண்டும் என்று குஷ்பு மேலிடத்தில் வலியுறுத்தி வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் குஷ்பு பெயர் இல்லை. மேலிடம் வாக்குறுதி அளித்தபடி திருச்சி திருநாவுக்கரசருக்கும், இளங்கோவனுக்கு தேனியும் ஒதுக்கப்பட்டது. இதனால் குஷ்புவுக்கு சட்டப்பேரவை அல்லது மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படும் என்று சமரசம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி