×

‘மோடியின் பேரன் ராகுல்...’ திண்டுக்கல் சீனிவாசன் ‘கலகல’

அதிமுக கூட்டணி கட்சி கூட்டத்தில் ‘மோடியின் பேரன் ராகுல்’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் அரங்கே சிரிப்பலையில் மூழ்கியது. திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம், பாமக மக்களவை வேட்பாளர் ஜோதிமுத்து அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அணியாகவும், அவரது பேரன் ராகுல் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றனர்.

இரு துருவங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு ஓட்டு வேட்டை நடக்கிறது. அதிமுக கோட்டையாக திண்டுக்கல் உள்ளது. ‘என்ன அண்ணே... இதை போய் கூட்டணி கட்சிக்கு கொடுத்து விட்டீர்களே’’ என சிலர் பேசுகின்றனர். 3 நாட்களாக போனை எடுத்தால் இதை பற்றித்தான் பேச்சு. தூங்க விடாமல் தொல்லை செய்தனர். நாங்கள் என்ன காசுக்காகவா தொகுதியை விற்றோம். மோடியின் திட்டங்களையும், தமிழக அரசின் சாதனைகளையும் வாக்காளர்களிடம் விளக்க வேண்டும்’’ என்றார். ஏற்கனவே பாரதப்பிரதமர் எம்ஜிஆர், பிரதமர் மன்மோகன் சிங், வாஜ்பாய் என மாற்றி மாற்றி பேசிய அமைச்சர், தற்போது இந்திரா காந்தியின் பேரன் என்பதற்கு பதிலாக, மோடியின் பேரன் ராகுல்காந்தி என பேசியதால் கூட்டத்தில் இருந்தவர்கள் அடக்க முடியாமல் சிரிப்பலையை பரவ விட்டனர்.

‘மக்கள் நலப்பணிகளில் கமிஷன் வாங்கினேனா?’

திண்டுக்கல்லில் மற்றொரு கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘நான் எம்பியாக இருந்தபோது, திண்டுக்கல் - சிலுவத்தூர் ரோட்டில் பாலகிருஷ்ணாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். தற்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேம்பாலத்தை கட்டி வருகின்றன. நில உரிமையாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மேம்பால பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டது. ஆனால் நான் கமிஷன் எதிர்பார்ப்பதால்தான் பாலம் வேலை தாமதம் என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் நலப்பணிகளில் எப்போதும் நான் கமிஷன் வாங்கியதில்லை. பொய்யான குற்றச்சாட்டுக்களை மக்கள் நம்ப மாட்டார்கள். நான் உங்கள் வீட்டு பிள்ளை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,Modi ,Dindukal Srinivasan , 'Modi's grandson Rahul, Dindukal Srinivasan 'kalakala'
× RELATED மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி...