கமுதி: கமுதியில் நடந்த முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில், உடல் முழுவதும் பக்தர்கள் சேறு பூசியும், அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று அக்கினிச்சட்டி திருவிழா நடந்தது.
பக்தர்கள் கோயிலை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்ததோடு, ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு கோயிலை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். உடல் முழுவதும் சேறு பூசுவதால் உடலில் உள்ள நோய்கள் தீரும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.மேலும் சில பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், வேல் குத்தியும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி