சென்னை: நீதிபதி வீட்டில் ஆயுதப்படை போலீஸ்காரர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கருக்கல் நாடார் பட்டி ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (29). சென்னை ஆயுதப்படை காவலராக உள்ளார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று மாலை 4.30 மணியளவில் பணியில் இருக்கும்போது யாரும் இல்லாத நேரத்தில் எஸ்எல்ஆர் துப்பாக்கியை எடுத்து தன்னுடைய நெற்றியில் வைத்து சுட்டுள்ளார். தலையை துளைத்து குண்டு பின்புறமாக வெளியேறியது. சத்தம் கேட்டு அங்கிருந்த மற்றொரு போலீசாரும் ஊழியர்களும் ஓடிவந்து பார்த்தனர்.
ரத்த வெள்ளத்தில் சரவணன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
யூனிபார்முடன் புதைக்க வேண்டும்
துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சரவணன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் கூறியிருப்பதாவது: சரவணன் ஆகிய நான் சுயமாக எழுதி கொள்வது, எனக்கு வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை. எனவே சாகப் போகின்றேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என் அம்மா, அப்பாவை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள். பிரதிபா, செல்வா, ருத்ரனை நல்லா படிக்க வையுங்க. பிஓஎல்டி அமவுன்ட மட்டும் என் பெற்றோரிடம் வாங்கி கொடுத்துடுங்க. நான் இறந்ததும் எனது காக்கி உடையை கழற்றக்கூடாது. என்னை அப்படியே புதைத்தாலோ எரித்தாலோ காக்கி உடையை கழற்ற கூடாது. இது என் கடைசி ஆசை. என்னை மன்னிச்சுடுங்க அம்மா, அப்பா, நீங்க நல்லா இருக்கனும் என்று எழுதியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி