பெங்களூரு: பெங்களூருவில் ராகுல்காந்தி பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சிலர் மோடி வாழ்க என்று முழக்கம் எழுப்பினர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மான்யாத்தா டெக்பார்க்கில் ஐடி ஊழியர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மத்தியில் ஆளும் பாஜ அரசின் செயல்பாடுகள் ரபேல் போர் விமானம் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான விளக்கங்கள் கொடுத்து கொண்டிருந்தார்.
கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் பிரதமர் மோடி வாழ்க என்று முழக்கம் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாநில போலீசாரின் முடிவுக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பெங்களூரு மான்யாத்தா டெக்பார்க்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் ஐடி ஊழியர்களான அபிலாஷ்,
ஹரிஷ், கவுரவ சக்ரவர்த்தி, நாத் உள்பட பலர் பிரதமர் மோடி வாழ்க என்று முழக்கம் எழுப்பினர். அவர்களை தாக்கியுள்ள போலீசார், அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நீதி, நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். பேச்சு சுதந்திரத்தை பறிக்கக்கூடாது’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி