சென்னை: அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு, விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானான். அவனை போலீசார் கைது செய்தனர்.சென்னை, வண்டலூர் 400 அடி வெளிவட்ட சாலையில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் கடந்தாண்டு பிப்ரவரி 6ம் தேதி, சென்னையை சேர்ந்த ஏராளமான ரவுடிகளுடன் ரவுடி பினு தனது பிறந்தநாளை கொண்டாடினான். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட கேக்கை, அரிவாளை கொண்டு வெட்டி சக ரவுடிகளுக்கு ஊட்டிவிட்டான்.
தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதியை சுற்றிவளைத்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் 75 ரவுடிகளை கைது செய்தனர். அப்போது ரவுடி பினு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இவன் மீது கொலை, கொள்ளை மற்றும் ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், ரவுடி பினுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பினு, மாங்காடு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட வரவேண்டும். ஆனால் அவன் கையெழுத்து போடாமல் திடீரென மாயமாகிவிட்டான். அவனை தேடி வந்தனர்.இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கூட்டாளிகள் 7 பேருடன் பதுங்கி இருந்த பினுவை கைது செய்தனர். அதைதொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் வெளியேவந்த பினு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தான்.இந்நிலையில், சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மடக்கி சோதனை நடத்தியபோது காரில் இருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். உடனடியாக போலீசார் காரை வழிமறித்து அவர்களை பிடித்தபோது ரவுடி பினு என்று தெரிந்தது. இதையடுத்து போலீசார் ரவுடி பினு மற்றும் அவனது கூட்டாளிகள் அக்பர் (36), மனோஜ்குமார் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி