×

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி?...சிறையில் உள்ள நாள்வரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிறையில் உள்ள நாள்வரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரம்

கடந்த சில நாட்களாக பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேரும் கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்து அரசாணையை வெளியிட்டது. இருப்பினும் சிபிஐ வசம் வழக்கு விசாரணை மாற்றப்படும் முன், சிபிசிஐடி போலீசார் தங்களது தரப்பு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக திருநாவுக்கரசின் வீடு மற்றும் பண்ணை வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், அவரது உறவினர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை பாதுகாப்பு கருதி வீடியோ கான்பரன்சிங் மூலம் கோவை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது சிபிசிஐடி போலீசாரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை அவரிடம் விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும் ஒருவர் சிக்குகிறார்

திருநாவுக்கரசுவிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த நாள்வர் மட்டுமல்லாது வேறு ஒருவருக்கும் இந்த குற்ற சம்பவத்தில் தொடர்பிருப்பதாக திருநாவுக்கரசு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் யார் என்பது குறித்த தகவலை பெற்ற சிபிசிஐடி போலீசார் 5வது குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், அவன் தப்பித்துவிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் 5வது நபரின் அடையாளம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

5வது நபரை நெருங்கிவிட்டதாகவும், அவரை இன்று அல்லது நாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து இதுவரை புதிதாக புகார் ஏதும் வரலில்லை எனவும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, திருநாவுக்கரசின் லேப்டாப்பை ஆய்வு செய்ததில் சபரிராஜ் மற்றும் சதீஷ் ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள் அதிகளவு சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இந்த நிலையில், சிறையில் உள்ள நாள்வரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டித்து பொள்ளாச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசுவின் நீதிமன்ற காவல் இன்று முடிவடையவிருந்த நிலையில், அவனது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi Sexual Harassment , Pollachi, Sexual Assault, Tirunavukarasu, Sabararaj, court guard
× RELATED பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு...