×

வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் தேர்தலை தள்ளிவைத்தது தவறு: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த தேர்தலை நடத்தக்கூடாது என்று தடை எதுவும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்திற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து எம்எல்ஏ போஸ் எதிர்மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி  வேல்முருகன் வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தார். இதற்கிடையே ஏ.கே.போஸ் காலமானார். இந்நிலையில் நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

 அதில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாராம் ஆகிய 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் வழக்கு தொடர்ந்த டாக்டர் சரவணன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி,  இந்த வழக்கின் தீர்ப்பை விரைவில் வழங்க வேண்டும். இந்த வழக்கை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலைத் தள்ளிவைத்துள்ளது என்று முறையிட்டார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி, வழக்கை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைப்பது தவறு. தேர்தலை நடத்தக்கூடாது என்று எந்த உத்தரவையும் இந்த நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்ததுடன் இந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Court ,EC , election, Court, EC
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...