×

வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்கு பற்றி 3 முறை பத்திரிகையில் விளம்பரம் தர வேண்டும்

* மதுரையில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிப்பு
* தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை: நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் தங்களின் குற்ற வழக்குகளை மூன்று முறை பத்திரிகையில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மக்களவை தொகுதி மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு  தாக்கல் இன்று தொடங்குகிறது. அதன்படி, அந்தந்த தொகுதிக்கான நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை  வேட்புமனு தாக்கல் செய்யலாம். முதலில் வருவோருக்கு  முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும்.வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் மற்றும் அவருடன் கூடுதலாக 4 பேர் என மொத்தம் 5 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வர அனுமதிக்கப்படுவார்கள். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற சனி  மற்றும் ஞாயிறு (23 மற்றும் 24ம் தேதி) விடுமுறை  என்பதால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. வேட்பாளர் வேட்புமனுவுடன்  தாக்கல் செய்யும்போது, அந்த விண்ணப்பத்தில படிவம் 26ல் கூடுதல் தகவல்கள் இந்த தேர்தலில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.  அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தனது 5 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை  தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், பிரிக்கப்படாத குடும்ப சொத்துக்கள், வெளிநாட்டில் உள்ள சொத்து விபரங்கள்  ஆகியவற்றையும் சேர்த்து அந்த விண்ணப்பத்தில் காட்ட வேண்டும். வேட்புமனு  தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது  வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ அதையும் அவர் சுட்டிக்காட்ட  வேண்டும். அதன்படி, அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து  வாக்குப்பதிவு நடக்கும் நாளுக்கு முன்பு 3 முறை பிரபல நாளிதழ்கள், டிவி  சேனல்களில் தன் மீதான வழக்கு விபரங்கள் பற்றிய விளம்பரங்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பெரிதாக வேட்பாளர் விளம்பரமாக கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும்.  மதுரையில் சித்திரை திருவிழா நடப்பதால் அங்குள்ள வாக்குச்சாவடிகளில்  மட்டும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். அதாவது கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரையில்  வாக்குப்பதிவு தினத்தன்று சாமி ஊர்வலங்கள் நடப்பதால் மின்சார  நிறுத்தம் ஏற்பட்டாலும், வாக்குச்சாவடிகளுக்கோ அல்லது வாக்குப்பதிவு  எந்திரங்களுக்கோ பாதிப்பு வராது. வாக்குப்பதிவு எந்திரங்கள் முழுவதும்  பேட்டரியில் இயங்குகின்றன.தேமுதிகவுக்கான  முரசு சின்னம் போல் தோற்றமளிக்கும் கூடை சின்னத்தை தமிழகத்துக்கு  ஒதுக்கக்கூடாது என்று அக்கட்சி சார்பில் கோரப்பட்டுள்ளது. அதை நாங்கள்  இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு அனுப்பி வைப்போம். தமிழ் மாநில காங்கிரசுக்கு  சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னத்தை பாமக  கோரியுள்ளது. அதற்கான உத்தரவு இன்னும் வரவில்லை.

தமிழகத்தில்  தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல்  ஆணையர் தேர்தல் நடைபெறுவதற்கு முன் இங்கு வருவர். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கணக்கில் காட்டப்படாத ரூ.6.77 கோடி பணம்  கைப்பற்றப்பட்டுள்ளது. தகுந்த ஆதாரங்கள்  காட்டப்படாததால் இதுவரை இந்த தொகை திருப்பி தரப்படவில்லை. பறிமுதல் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளன. தமிழகம்  முழுவதும் உரிமம் உள்ள 7,020 கைத்துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  உரிமம் இல்லாத 61 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 25 உரிமங்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,111 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.
பொது சுவர்களில் வரையப்பட்டு  இருந்த ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 201 விளம்பரங்கள், போஸ்டர்கள்  அப்புறப்படுத்தப்பட்டன. அதுபோல் தனியார் சுவர்களில் இருந்து ஒரு லட்சத்து  12 ஆயிரத்து 159 விளம்பரங்கள் நீக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை
சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல்காந்தி பேசியது  தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. முறைப்படி அனுமதி அளித்த பின்னர்தான் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக சென்னை தேர்தல் அதிகாரி விளக்க கடிதத்தில் கூறியுள்ளார். இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாகத் தெரியவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக கடந்த ஒரு மாதத்தில் 8 லட்சத்து 24 ஆயிரம் விண்ணப்பங்கள்  பெறப்பட்டது. இதில் 6.95 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்களும் விரைவில் பரிசீலிக்கப்படும். இவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் இந்திய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nominee ,newspaper , nomination , newspaper, criminal case
× RELATED கேள்வி கேட்டால் ரெய்டா?: தமிழகத்திற்கு...