உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிங்கவால் குரங்குகள் உள்ளன. இவை வனப்பகுதியில் உள்ள உயரமான மரங்களில் துளிர்க்கும் குறுந்தளிர், பூக்கள் மற்றும் காய், கனிகளை தின்று வசித்து வருபவை. சமீப காலமாக கடும் வெயில் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகளில் இலைகள் காய்ந்து உதிர்ந்து வருகின்றன. மேலும் நீரோடை, அருவிகளும் வற்றியதால் குரங்குகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகின்றன. இவ்வாறு வெளியேறும் சிங்கவால் குரங்குகள் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட உடுமலை மூணாறு செல்லும் சாலையில் ஒன்பதாறு செக்போஸ்ட் மற்றும் சின்னாறு பகுதிக்கு வந்து சாலையோரம் காத்திருக்கின்றன.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு தின்பண்டங்களை வாகனங்களில் இருந்து வீசி செல்வதால் இவற்றை உண்பதற்காக சிங்கவால் குரங்குகள் சாலையில் இங்கும், அங்குமாக ஓடி திரிகின்றன. மேலும் தண்ணீர் தேடி ஏராளமான சிங்கவால் குரங்குகள் அமராவதி அணைக்கு வருகின்றன. இடம்பெயறும் குரங்குகள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்க கூடிய அபாயம் உள்ளதால் மலைப்பாதையில் பயணிக்கின்ற வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி