சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் தினமும் வருவாய் விவரங்களை மாவட்ட பதிவாளர்களிடம் பெற்று வருகின்றனர். மேலும், அவர்கள், குறைவாக வருவாய் வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு உயர்வால் வருவாய் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டான 2018-19ல் 11,512 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை கடந்த பிப்ரவரி இறுதி வரை ரூ.9,500 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த வாரம் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் பதிவுத்துறை உயர் அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், இந்த மாத இறுதிக்குள் ரூ.11,512 கோடி இலக்கை அடைய சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவை அதிகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து பதிவுத்துறை தலைமை அலுவலகம் சார்பில் வருவாயை பெருக்க சார்பதிவாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் வருவாய் குறித்து அறிக்கை பெற வேண்டும் என்று மாவட்ட பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்பேரில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் மாவட்ட பதிவாளர்கள் அறிக்கை பெற்று வருகின்றனர். மேலும், வருவாய் குறைவான அலுவலகங்களுக்கு மாவட்ட பதிவாளர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இம்மாத இறுதியில் நடப்பு நிதியாண்டில் குறைவான வருவாய் ஈட்டிய சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது, சார்பதிவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 23,30 ல் அலுவலகம் செயல்படும்
தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பதிவு அலுவலகங்களில் ஆவண பதிவுகள் மேற்கொள்வதற்கு அலுவலகங்களை மார்ச் 23,30 ஆகிய தேதிகளில் செயல்படுகிறது. அன்றைய தினத்தில் காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி