×

தேர்தல் செலவை எதிர்கொள்ள விவேக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் டிடிவி.தினகரன்: சசிகலாவை விரைவில் சந்தித்து ஆலோசிக்க விவேக் முடிவு?

சென்னை: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் செலவு செய்ய விவேக் ஜெயராமனை எதிர்பார்த்து டிடிவி.தினகரன் காத்துக்கொண்டிருப்பதாக அமமுக வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன. தமிழத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அமமுக தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது. ஓரிரு நாட்களில் இதுகுறித்த அறிவிப்பை டிடிவி.தினகரன் வெளியிட உள்ளார்.   இதேபோல், எஸ்.டி.பி.ஐ கட்சி மட்டுமே அமமுகவுடன் கூட்டணியில் உள்ளது. எம்.பி தேர்தலில் 39 தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு தொகுதிகளிலும் வேட்பாளராக அந்தந்த தொகுதிகளில் பிரபலங்கள் நிறுத்தப்பட உள்ளனர். இந்தநிலையில், தேர்தல் தொடர்பான அனைத்துப்பணிகளும் முடிந்துள்ள நிலையில் பணப்பிரச்னையில் டிடிவி.தினகரன் சிக்கி வருவதாகவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செலவு செய்ய விவேக் ஜெயராமனின் கையை எதிர்பார்த்துக்காத்திருப்பதாக அமமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் வெற்றிபெற சசிகலா உத்தரவின் பேரில் விவேக் ஜெயராமன் பண உதவிகளை செய்தது போல், நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலிலும் சசிகலா மூலம் விவேக் ஜெயராமன் உதவியை டிடிவி.தினகரன் நாடி உள்ளார்.

இதுகுறித்து அமமுக வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது: அதிமுகவில் இருந்து டிடிவி.தினகரன் நீக்கப்பட்ட பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் வெற்றிபெற பல்வேறு நடவடிக்கைகளை விவேக் ஜெயராமன் எடுத்து வந்தார். சசிகலா குடும்பத்தில் ஒரு செல்வாக்கு மிக்க நபராக விவேக் உள்ளார். அதனால், பல்வேறு நிலைகளில் அவரின் வரவை எதிர்பார்த்தே காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை போன்றே தற்போது நாடாளுமன்ற தேர்தலிலும் விவேக் ஜெயராமனிடம் இருந்து பண பலன்களை எதிர்பார்த்து டிடிவி.தினகரன் காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், நேரடியாக விவேக்கிடம் கேட்க முடியாமல் குடும்ப உறுப்பினர்கள் மூலம் கேட்டு வருகிறார். இதற்கு விவேக்கிடம் இருந்து எந்த பதிலும் வராததால் தினகரன் சற்று சோகத்தில் ஆழ்ந்துபோயுள்ளார். இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து டிடிவி.தினகரன் இதுகுறித்து பேசி உள்ளதாக தெரிகிறது. அப்போது, பெரும்பாலான வேட்பாளர்கள் கட்சியிடம் பணம் எதிர்பார்த்துக்காத்திருப்பதாகவும், அதனால் விவேக்கிடம் பேசி தேர்தல் செலவிற்கு பணத்தை பெற்றுத்தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதற்கு சசிகலா, ‘சரி, விவேக்கிடம் இதுகுறித்து பேசுகிறேன்’ என்று கூறியுள்ளார். எனவே, இதுகுறித்து பேச விரைவில் விவேக் ஜெயராமனும் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க உள்ளார். இவ்வாறு தெரிவித்தன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vivek ,Sasikala , election, Vivek, Sasikala
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...