×

தக்கலை அருகே பரபரப்பு: தீப்பிடித்து சாலையில் சாய்ந்த மரம்

மார்த்தாண்டம்: நாகர்கோவில்-களியக்காவிளை என்எச் 47ல் அழகியமண்டபம் சந்திப்பை ஒட்டி இருபுறங்களிலும் வாதுமை மரங்கள் உள்ளன. இதில் தனியார் ஒர்க்-ஷாப்புகள் உள்ள பகுதியில் சில வாதுமை மரங்கள் உள்ளன. இந்த மரங்களை சுற்றி அதிகம் குப்பைகள் சேர்ந்துள்ளன. இதுபோல மரங்களில் இருந்து விழும் காய்ந்த இலைகளும் அப்பகுதியில் காணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் திடீரென  ஒரு வாதுமை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து புகை வெளிவர தொடங்கியது. அப்பகுதியினர் இதைக்கண்டும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. யாரோ புகைத்துவிட்டு எஞ்சிய துண்டை போட்டு சென்றிருக்கலாம் என நினைத்தனர்.

இந்த நிலையில் திடீரென மரத்தின் அடிப்பகுதி தீப்பிடித்து எரிந்தது. மேலும் பலத்த சத்தத்துடன் மரம் சாலையில் சாய்ந்து விழுந்தது. அப்போது அப்பகுதியில் வாகனங்கள் எதுவும் செல்லாததாலும், பொதுமக்கள் யாரும் இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை கிரேன் வாகனம் மூலம் ஓரளவு அகற்றி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். மேலும் இது குறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதனால் சுமார் அரை  மணி நேரம் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Takalai ,road , Firewood, fire, road, wood
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...