சென்னை: அரவக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதி தேர்தல் வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.கடந்த 2016 மே மாதம் தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின்போது பணப் பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, அந்த தொகுதிக்கு 2016ம் ஆண்டு நவம்பரில் மீண்டும் தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். இந்நிலையில், இவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் கீதா உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த செந்தில் பாலாஜியின் வேட்பு மனுவை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தேன். இருப்பினும், எனது புகார் மனுவை ஏற்காமல் செந்தில் பாலாஜியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டார். எனவே, அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும், வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கை நிராகரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார் என்றார்.இதனைபதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி