×

தாம் கேரளா என்பதால் முல்லை பெரியாறு வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது; உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப்

புதுடெல்லி: முல்லை பெரியாறு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் மறுப்பு தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்தவர் என்பதால் தாம் வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என்று நீதிபதி கே.எம்.ஜோசப் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட புதிய கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனவச்சல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்ட கேரள அரசு திட்டமிட்டது.

இதற்காக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு புலிகள் சரணாலயத்துக்குட்பட்ட ஏரியில் இருந்து மணல் அள்ளி வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை தொடங்கியது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க கோரி, பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதில் முல்லைப்பெரியாறு அணை பகுதிகள் தமிழகத்திற்கு 999 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதால் அதில் கட்டுமானப் பணிகளை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு வாதிட்டது.

இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்ட அனுமதி வழங்கியதுடன், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அணை பகுதியில் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்க கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் ஆஜராகி வாதிட்டார். அணை அருகே வாகன நிறுத்தம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. வாகன நிறுத்தத்தால் சிறிய விலங்குகள் வாழ முடியாத நிலை ஏற்படும் என்றும் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஜோசப் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முல்லை பெரியாறு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் மறுப்பு தெரிவித்தார். கேரளாவை சேர்ந்தவர் என்பதால் தாம் வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அசோக் பூஷண் அமர்வில் வேறொரு நீதிபதி இடம்பெறுவார் என்று தெரிகிறது. மேலும் இந்த வழக்கை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : KMJoseph ,Kerala ,Supreme Court ,Mullai Periyar , Kerala, Mulla Periyar, Tamil Nadu, Supreme Court, Judge KMJoseph
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...