×

பயங்கரவாத பட்டியலில் மசூத் அசாரின் பெயரை சேர்க்கும் வரை போராட்டம் தொடரும் : சீனாவின் முடிவுக்கு இந்தியா பதிலடி

டெல்லி : சர்வதேச பயங்கரவாத பட்டியலில் மசூத் அசாரை சேர்க்க சீனா 4வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை

இதற்கிடையே, புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியாவின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய தீர்மானத்தை கடந்த மாதம் கொண்டு வந்தன. இதையடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவின் நடவடிக்கைக்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டைப் போட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

இதனிடைய புல்வாமா தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மசூத் அசாரை சீனா பாதுகாப்பதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் சீனாவின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், சீனாவின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பயங்கரவாத அமைப்பின் தலைவரை சர்வதேச பட்டியலில் சேர்க்க சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளை சீனா தடுத்துள்ளது என்றும் எனினும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான முயற்சிகளை இந்தியா தொடர்ந்து எடுக்கும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.ஏற்கனவே கடந்த 3 முறை இந்தியா மசூத் அசாரின் பெயரை தடை செய்யப்பட பயங்கரவாதிகள் பட்டியலில் வைக்கும் தீர்மானம் கொண்டு வந்த போது, சீனா தடுத்து வந்தது. தற்போது 4வது முறையாக மசூத் அசார் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு முட்டுக்கட்டை போட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fight ,Masood Azhar ,China ,India , China, UN Security, Council, Pulwama Attack, Masood Asar, China, State Department
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...