×

இம்ரான்கான் மிகப்பெரிய தலைவர் என்றால் தீவிரவாதி மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாரா ?: சுஷ்மா சுவராஜ் கேள்வி

டெல்லி : இம்ரான்கான் ஒரு மிகப்பெரிய தலைவர் என்றால் தீவிரவாதி மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை

இதற்கிடையே, புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியாவின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய தீர்மானத்தை கடந்த மாதம் கொண்டு வந்தன. இதையடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவின் நடவடிக்கைக்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டைப் போட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

இதனிடைய புல்வாமா தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மசூத் அசாரை சீனா பாதுகாப்பதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.   

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி


டெல்லியில் தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், தீவிரவாதம் தொடர்பான விஷயத்தில் வாய்ப்பேச்சு மட்டும் போதாது என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார். இம்ரான்கான் உண்மையிலேயே சமாதானத்தை விரும்பினால், ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஒப்படைப்பதில் ஏன் தாமதிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாகிஸ்தானை பயங்கரவாத அமைப்புகள் இல்லாத நாடாக மாற்றினால் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அந்நாட்டுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sushma Swaraj ,Masood ,Imran Khan ,India ,Assar , Is Imran Khan a big leader if terrorist Masood is ready to hand over Assar to India: Sushma Swaraj
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு