×

அதிமுக கூட்டணியில் தொகுதிகளை பிரிப்பதில் நீடிக்கும் இழுபறி : நள்ளிரவில் கோயலுடன் ஆலோசனை நடத்திய OPS

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக - 7, பாஜக - 5, தேமுதிக- 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், சிதம்பரம், நாகை, மயிலாடுதுறை, மதுரை, தேனி, நெல்லை தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நிலவும் நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நள்ளிரவில் ஆலோசனை நடத்தினார். அதிமுக கூட்டணி  கட்சி தலைவர்களின் ஆலோசனை சுட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப்பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதிப்பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.

வடதமிழகத்தில் 3 தொகுதிகளை பாமக-வும் தேமுதிகவும் ஒன்றாக கேட்பதே தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நிலவுவதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. தொகுதிப்பட்டியல் பின்னர் வெளியாகும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இந்நிலையில் பாரதிய ஜனதாவின் தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன், பன்னீர்செல்வமும், தேர்தல் பங்கீட்டு குழு உறுப்பினர் வேலுமணியும் நள்ளிரவில் ஆலோசனை நடத்தினர். இரவு 10 மணிக்கு மேல் துவங்கிய இந்த ஆலோசனை நள்ளிரவு வரை நீடித்தது. கூட்டணிக்குள் தொகுதிகளை சமரசமாக பிரித்து கொள்வது, பலம் அறிந்து கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ODP ,withdrawal ,split ,AIADMK ,OPS , Lok Sabha polls, AIADMK, Piyush Goyal, O. Panneerselvam
× RELATED பெற்றோர்களுக்கும்...