×

பொள்ளாச்சி ஆபாச பட விவகாரம் திருநாவுக்கரசுக்கு அடைக்கலம் தந்த சேலம் தோழியை பிடிக்க தீவிரம்

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் ரிஸ்வந்த் என்ற சபரிராஜன் (25). இவர், பேஸ்புக்கில், பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவியுடன் நட்பாக பழகினார். அந்த மாணவியை கடந்த பிப்ரவரி 12ம் தேதி, உடுமலை ரோடு ஊஞ்சவேலாம்பட்டிக்கு அழைத்து, காரில் ஏற்றிச்சென்று மாணவியின் ஆடையை சபரிராஜன் களைய, அதை அவரது நண்பர்கள் செல்போனில் படம் பிடித்தனர். அந்த படத்தை காட்டி மிரட்டி, மாணவியிடம் பணம் கேட்டனர். அவர், தன்னிடம் பணம் இல்லை என கூறவே, மாணவி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கசெயினை பறித்துக்கொண்டு, அவரை காரில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் அடிக்கடி மாணவியின் செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தை கொண்டுவந்து தரவில்லை என்றால் காரில் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டினர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த 25ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். வழக்கை விசாரித்த போலீசார் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திருநாவுக்கரசு கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (ஏ, பி), 392 (பாலியல் ரீதியிலான துன்புறுத்தல், வழிப்பறி), தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் பாதிப்பு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேரும் பொள்ளாச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் (எண் 1) கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நண்பர்களான இவர்கள் 4 பேரும் பேஸ்புக் மூலம் மாணவிகள், இளம்பெண்களிடம் நட்பை ஏற்படுத்தி ஆனைமலை சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு தனியாக வரவழைத்து, ஆபாசமாக படம் எடுத்து, அதைக்காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக, 200க்கும் மேற்பட்ட பெண்களை இவ்வாறு சீரழித்துள்ளது தெரியவந்தது. இதற்கிடையில் கும்பலால் பாதிக்கப்பட்ட மாணவியின் நெஞ்சை பிளக்கும் கதறல் வீடியோக்கள் வெளியானது. அதில், மாணவி, ‘‘பிரெண்டா நெனச்சுதானே நம்பி வந்தேன்; என்ன விட்டு... நீ இப்படி செய்யலாமா...?’’ என கதறுகிறார். அப்போது சபரிராஜன் ‘‘உன்னை பாத்துட்டுதான் கேட்கிறேன். பேண்ட கழட்டு’’ என்கிறார். அப்போது திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் உள்ளே வருகின்றனர். மற்றொரு வீடியோவில் ஒரு பெண்ணை திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பெல்டால் அடித்து துன்புறுத்துகின்றனர். அப்போது அந்த பெண், ‘‘அடிக்காதீங்க அண்ணா, நானே கழட்டிறேன். ரொம்ப வலிக்குது. என்ன விட்டுருங்கண்ணா’’ என சொல்லி அந்த கும்பலிடம் கதறுகிறார். இந்த வீடியோக்கள் வைரலானது அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த விஐபியின் இரு மகன்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளது. உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் போராட்டம் வலுத்தது. சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு சமூகநல இயக்கங்களும் போராட்டத்தில் குதித்தன.

இதற்கிடையில் இந்த வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு நேற்று பிற்பகல் உத்தரவிட்டது. பின்னர் மாலை 4.30 மணிக்கு, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். ஆபாச படம் எடுத்து மாணவிகளை மிரட்டிய வழக்கை சிபிஐ அதிகாரிகள் விரைவில் விசாரிக்க உள்ளதால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள திரு என்ற திருநாவுக்கரசு, எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய செயலில், திருநாவுக்கரசுக்கு அவருடன் படித்தவரும், சேலத்தை சேர்ந்தவருமான பெண் தோழி ஒருவர் உடந்தையாக இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மூலம்தான் ஏராளமான இளம்பெண்களின் செல்போன் எண்கள் திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களுக்கு கிடைத்துள்ளது. திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்தபோதும், அவர் போலீஸ் கண்ணில் சிக்காமல் இருக்க அடைக்கலம் கொடுத்தது அந்த பெண் தோழிதான் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திருநாவுக்கரசு தனது வலையில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டரையும் வீழ்த்தி உள்ளார். அவரிடம் தன்னை பெண் என்றும், பெண்களுக்கான நோய்களுக்கு சந்தேகம் கேட்பதுபோல் கேட்டு, லெஸ்பியனாக இருக்கலாமா? என கேட்டுள்ளார். இதற்கு அந்த டாக்டரும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை பொள்ளாச்சி வரவழைத்து, அனுப்பிய மெசேஜ் மற்றும் பேசிய ஆடியோக்களை காண்பித்து, மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார். திருநாவுக்கரசு கும்பலிடம் ரூ.1.5 கோடியை அந்த டாக்டர் இழந்துள்ளார். அவர் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டது குறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புகார் கொடுத்தாராம். அந்த புகார் போலீசாரால் கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளதால் அந்த பெண் டாக்டரை பொள்ளாச்சி போலீசார் தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். அவரும் புகார் தெரிவிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் புகார் அளிக்கும் பட்சத்தில், மேலும் பல பிரிவுகளில் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


பண்ணை வீடு, ரெடிமேடு கடையில் போலீசார் அதிரடி சோதனை

பொள்ளாச்சி-ஆனைமலை ரோட்டில் சின்னப்பம்பாளையம் என்ற கிராமத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் தான் திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் போலீசார் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். அப்போது பாலியல் தொடர்பான முக்கிய ஆவணங்கள், கட்டுகட்டாக ஆணுறைகள் சிக்கியது. வீட்டை சுற்றிலும் ஏராளமான ஆணுறைகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் திருநாவுக்கரசின் கூட்டாளிகளில் ஒருவரான சதீஸ் என்பவருடைய ரெடிமேடு கடையிலும் சோதனை நடத்தப்பட்டது. இங்குதான் திருநாவுக்கரசு உள்பட நண்பர்கள் 4 பேரும் சந்திப்பது வழக்கம். பேஸ்புக்கில் பழகிய பெண்களை வரவழைத்து காதல் வலையில் வீழ்த்துவது, சிக்கிய பெண்களை ஆபாச படம் எடுப்பது உள்ளிட்ட குற்றச்செயல்கள் இங்குதான் அரங்கேறி உள்ளது. இங்கிருந்தும் சில முக்கிய ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,Salem ,Thirunavukarasu , salem friend, Sheltered , Thirunavukarasu
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!