* அடிப்படை வசதிகளும் மோசம்; கோயில் நிர்வாகம் கவனிக்குமா?
சாத்தூர் : சாத்தூர் அருகே, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான கட்டப்பட்ட விடுதி இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மேலும், போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். எனவே, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே, இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்கோயில் உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர்.
இங்கு வரும் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். கோயிலுக்கு வருபவர்கள் ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓலை கொட்டகைகளில் தங்குகின்றனர். இதற்காக அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஓலை கொட்டகைகளில் தீப்பிடிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு அறைகள் ஏற்படுத்த வேண்டும். கோயில் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்கள், ஏதாவது உடல்நலம் பாதிக்கப்பட்டால், அவர்களை கொண்டு செல்ல அவசர வழி கிடையாது.
பஸ்நிலையம் இல்லை: கோயில் திருவிழாக் காலங்களில் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு நிரந்தரமான பஸ்நிலையம் கிடையாது. கோயிலுக்கு வரும் பஸ்கள் இருக்கன்குடி காவல்நிலையம் முன்பு திருப்புகின்றனர். சில பஸ்களை இருக்கன்குடி- நென்மேனி சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் இருக்கன்குடி-அருப்புக்கோட்டை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பயணிகளுக்கு நிழற்குடையும் இல்லை.
சுகாதாரக்கேடு: நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பொங்கல் வைக்க கோயில் முன்பு பொங்கல் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி சுகாதாரக் கேடாக உள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். கோயில் பகுதியில் அதிக அளவில் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாலும், குப்பைத்தொட்டி இல்லாததாலும் பாதை நெடுகிலும் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றும் வீசுகிறது. எனவே, கோயில் நிர்வாகத்தினர் கோயில் பகுதி, பொங்கல் மண்டபம் ஆகியவற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதாரமற்ற உணவகங்கள்: கோயிலை சுற்றிலும், வைப்பாற்று பகுதியிலும், இருக்கன்குடி பஸ்நிறுத்தம் அருகிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட சிற்றுண்டி உணவகங்கள், கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலாவதியான உணவுப் பொருள்களும், தரம் குறைந்த குளிர்பானங்களையும் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இவைகளை வாங்கி சாப்பிடும் பக்தர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, கோயில் நிர்வாகம், சுதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திறக்கப்படாத தங்கும் விடுதி: திருவிழாக் காலங்களில் பக்தர்கள் தங்குவற்காக, தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ரூ.25 லட்சம் செலவில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நந்தவனப் பகுதியில் குளியலறை, கழிவறை வசதியுடன் தங்கும் அறைகள் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை திறக்கப்பட வில்லை.
இதேபோன்று தண்ணீர் வசதி, வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அடிப்டை வசதிகளை செய்ய கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது: சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி