திருவொற்றியூர்: மாணவர்களை தரக்குறைவாக பேசிய அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடிய சம்பவம் மணலி புதுநகரில் பரபரப்ைப ஏற்படுத்தியது. மணலி புதுநகர் ஆண்டார்குப்பம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியர் மாணவ, மாணவிகளை தரைகுறைவாக பேசுவதாகவும், இதனால் மாணவ, மாணவியர் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அறித்த பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது, முறையான பதிலளிக்காமல், தலைமை ஆசிரியர் மரியாதை குறைவாக பெற்றோரிடம் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மணலி புதுநகர் போலீசார், போராட்டம் நடத்திய பெற்றோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர்கள் கூறினர்.
இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெற்றோர் கலைந்து சென்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் பெற்றோர்களும், மாணவர்களும் கையெழுத்திட்ட புகார் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘‘பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி என்பவர் மாணவ, மாணவிகளை கடுமையான வார்த்தைகளால் தரக்குறைவாக பேசி துன்புறுத்துகிறார். மேலும், தான் கூறும்படி நடக்காவிடில், தேர்ச்சி பெற முடியாமல் செய்து விடுவேன், பள்ளியை இழுத்து மூடி விடுவேன் என மாணவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதனால், மாணவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகி, பள்ளிக்கு வர அச்சப்படுகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தைத் தொடர்வோம்,’’ என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி