தஞ்சை : தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனிதன்மையுடன் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை பாதுகாப்பதற்கும் புவிசார் குறியீடு சான்று வழங்கப்படும். அத்தகைய அங்கீகாரம் தற்போது 5 வருட சட்டப் போராட்டத்திற்கு பிறகு திருபுவனம் பட்டுச் சேலைக்கு கிடைத்துள்ளது.
தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் பொம்மை மற்றும் தஞ்சாவூர் நாச்சியார் கோவில் குத்துவிளக்கு ஆகியவற்றின் வரிசையில் திருபுவனம் பட்டுக்கும் புவிசார் அங்கீகாரம் கிடைத்திருப்பது தஞ்சை கலைகளுக்கு கூடுதல் பெருமை என்றும் இதன் மூலம் போலி பட்டுப் புடவைகளை விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் திருபுவனம் கைத்தறி பட்டு நெசவாளர்களை தவிர வேறு யாராவது நேரடியாகவோ இணையதளம் மூலமாகவோ போலியாக விற்பனை செய்தால் அது சட்டப்படி குற்றம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக ஈரோடு மஞ்சளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி