×

நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் கத்தியால் குத்தி மகன் கொலை : தந்தை வெறிச்செயல்

பூந்தமல்லி: நடத்தையில் சந்தேகம் காரணமாக மகனை கத்தியால் குத்தி தந்தையே கொலை செய்த சம்பவம் வளசரவாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (50). கூலி தொழிலாளி. இவரது மனைவி லோகநாயகி (44). இவர்களது மகன் சதீஷ் (22). இந்நிலையில், தனது மனைவிக்கும், மகனுக்கும் தகாத உறவு இருப்பதாக  சக்திவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி மனைவி மற்றும் மகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஏன் இப்படி தாய், மகன் உறவை கொச்சைப்படுத்துகிறீர்கள் என்று மனைவியும், மகனும் சக்திவேலிடம் கேட்டு சண்டையிட்டுள்ளனர். இருப்பினும் சந்தேகம் தீராத சக்திவேல், திடீரென நள்ளிரவு எழுந்து மனைவி அருகில்  தூங்குகிறாரா என்று பார்ப்பாராம். இது லோகநாயகிக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு தூக்கம் வராமல் நீண்ட நேரம் விழித்திருந்த சக்திவேல், அதிகாலை சமையல் அறைக்கு சென்று, அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து, தூங்கிக் கொண்டிருந்த மகன் சதீஷை சரமாரியாக குத்தியுள்ளார்.  சத்தம் கேட்டு எழுந்த லோகநாயகி கணவரை தடுக்க முயன்றார். அப்போது, அவரது கைகளிலும் பலத்த கத்திக்குத்து விழுந்தது. அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் அங்கிருந்து சக்திவேல் தப்பியோட  முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதனிடையே ரத்தவெள்ளத்தில் கிடந்த சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ராயலா நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்கள் பிடியில் இருந்த சக்திவேலை மீட்டனர். படுகாயமடைந்த லோகநாயகியை  மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சதீஷின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். குடும்ப பிரச்னையில் மகனையே தந்தை குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Disappointment ,behavior, Kill ,knife, ,Father's hysteria
× RELATED மதுரையில் வாலிபர் வெட்டிக் கொலை