ஷா ஆலம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர், கிம் ஜாங் நம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு பெண்களில் இந்தோனேஷிய பெண்ணை மலேசிய நீதிமன்றம் நேற்று விடுவித்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மூத்த சகோதரர் கிம் ஜாங் நம். வாரிசுப்படி வடகொரியாவின் முக்கிய தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் சில பிரச்னைகளால் கடந்த 2003ம் ஆண்டு வடகொரியாவை விட்டு வெளியேறினார். அதன்பின் கடந்த 2010ம் ஆண்டு இவரது இளைய சகோதரர் கிம் ஜாங் உன் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், கிம் ஜாங் நம், கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேஷியாவின், கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது இவர் அருகே வந்த இரு பெண்கள் ‘வி.எக்ஸ்’ என்ற ரசாயன விஷத்தை ஸ்பிரே செய்துவிட்டு சென்றனர். அடுத்த சில நொடிகளில் அவர் இறந்தார். அவர்கள் வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த இரு பெண்கள் என விசாரணையில் தெரிந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘‘டி.வி காமெடி நிகழ்ச்சிக்கு இது போல் நடிக்கும்படி சிலர் கூறியதால் செய்தோம்’’ என கூறினர்.
இவர்களோடு சேர்த்து வடகொரியர்கள் 4 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவர்கள் கொலை நடந்த சில மணி நேரங்களில் மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த கொலை சதிக்கு வடகொரியாதான் காணம் என தென்கொரியா முன்பு குற்றம்சாட்டியது. ஆனால், இதை வடகொரியா மறுத்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மலேசியாவின் ஷா ஆலம் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது, இந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட இந்ததோனேஷியப் பெண் சிதி ஆயிஷா, அப்பாவி என்பதால், அவர் மீதான கொலை குற்றச்சாட்டை நீக்கி விடுவிக்கும்படி அவரது வக்கீல் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று சிதி ஆயிஷாவை நீதிபதி அஸ்மின் அரிபின் விடுவித்தார்.
இதுகுறித்து பேட்டியளித்த ஆயிஷா, ‘‘இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோல் நடக்கும் என தெரியாது. இதை நான் எதிர்பார்க்கவில்லை’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி