×

ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்க தாசில்தார் அலுவலகங்களில் திடீர் சோதனை: லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் பிரிவு சிறப்பு தாசில்தாரர் தர்மராஜ், ஊழல் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தர்மராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தர்மராஜ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் அடிப்படையில் தர்மராஜின் பதவி உயர்வை தடுக்கும் நோக்கில் 2018 அக்டோபரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் உள்ளது. எனவே, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, தர்மராஜ் மீது 2016ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து தற்போது கவனத்துக்கு வந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: பணியிடை நீக்கம் என்பது குற்றச்சாட்டுகள் குறித்து துறைரீதியான விசாரணைக்கு ஏதுவாக அலுவல்களில் இருந்து நீக்கி வைப்பது தானே தவிர, தண்டனையல்ல.   

இந்த விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் புற்றுநோய் போல் ஊழல் எல்லா மட்டத்திலும் பரவியுள்ளது.  ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, லஞ்சத்தை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்த வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் தங்கள் அலுவலகங்களில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகளை கண்மூடி வேடிக்கை பார்ப்பதை விடுத்து ஊழல் செய்பவர்கள் தொடர்பாக   உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்குவதை முறைப்படுத்தி, எத்தனை நாட்களில் சான்றிதழ் கிடைக்கும் எனக் குறிப்பிட்டு, குடிமக்கள் சாசனத்தை வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : offices ,High Court Advocate for Bribery , High Court, Department of Inquiry
× RELATED அரசு பள்ளி கட்டிடங்களில் செயல்படும்...