×

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட 23 வயது எலக்ட்ரீஷியன்

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் 23 வயது எலக்ட்ரீஷியன் என பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14ம் தேதி நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியாயினர். வேனில் வெடி பொருட்கள் நிரப்பி தாக்குதல் நடத்தியவன் அடில் அகமது தர் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், இந்த தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்களை கண்டறியும் பணியில் தேசிய புலனாய்வு குழு இறங்கியுள்ளது. இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன், வெடி பொருட்களை ஏற்பாடு செய்தவன் முடாசிர் அகமது கான்(23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. புல்வாமா பகுதியைச் சேர்ந்த இவன் ஐடிஐ.யில் ஓராண்டு எலக்ட்ரீசியன் படிப்பு முடித்துள்ளான். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் 2017ம் ஆண்டு சேர்ந்துள்ளான். இவனை இந்த அமைப்பில் தீவிரமாக செயல்பட வைத்தது நூர் முகமது டான்ரே. இவன் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொல்லப்பட்டான். அதன்பின், அகமதுகான் கடந்தாண்டு ஜனவரி 14ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்து தீவிரமாக செயலாற்றி வந்தான்.

கடந்தாண்டு ஜனவரி மாதம், லெத்போரா பகுதியில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது நடத்திய தாக்குதலில் இவனுக்கு முக்கிய பங்குள்ளது. அந்த தாக்குதலில் 5 வீரர்கள் பலியாயினர். கடந்தாண்டு பிப்ரவரியில் சுன்ஜாவன் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலிலும் இவனுக்கு தொடர்பு உள்ளது. இந்த தாக்குதலில் 6 வீரர்கள் பலியாயினர். கடந்த மாதம் 14ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் வெடிபொருட்களை அகமதுகான் தான் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளான். இவனுடன் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய அடில் அகமது தான் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளான். தாக்குதல் நடத்துவதற்கு 10 நாட்கள் முன்புதான், இந்த வேன் வாங்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதிதான் இந்த வேனை வாங்கியுள்ளான். தெற்கு காஷ்மீர் பிஜ்பெகரா பகுதியைச் சேர்ந்த சாஜத் பாட் என்பவனுக்கு இந்த தாக்குதலில் தொடர்பு உள்ளது என தேசிய புலனாய்வு குழு நம்புகிறது. இவனும் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறான். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : electrician ,attack ,Pulwama , Pullamma attack, mastermind. 23 years old electrician
× RELATED தாம்பரம் அருகே வாங்கிய கடனுக்கு...