×

மக்கள் எதிர்ப்பை மீறி திறப்பதை கண்டித்து டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை: கலைந்து செல்ல மறுத்த 60 பேர் கைது

பூந்தமல்லி: சென்னை மதுரவாயலில் புதிதாக திறக்க உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்திய 60 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மதுரவாயல், கணபதி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த  குடியிருப்புவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இடத்தில் மதுக்கடை திறக்கக்கூடாது என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.ஆனால் மதுக்கடையை திறப்பதற்கான பணிகளில் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று பிற்பகலில் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 60க்கும்  மேற்பட்டோர் அந்த கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து மதுரவாயல் உதவி கமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் கலைந்து செல்ல மறுத்ததால் பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.  பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இப்போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றியபோது ஒரு பெண்ணின் மகள் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம்  அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அடித்து நொறுக்குவோம்
போராட்டம் நடத்திய பெண்கள் கூறியதாவது: இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. வீடுகளுக்கு மத்தியில் புதிதாக டாஸ்மாக் கடை திறந்தால் குடிமகன்கள் குடித்துவிட்டு இந்த வழியாக  செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வார்கள். குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் அருகிலேயே 2 பள்ளிகள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள்,  வேலைக்கு செல்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்தித்தான் செல்ல வேண்டும்.இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வீட்டின் அருகே டாஸ்மாக் கடை திறப்பதால் மாணவர்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும்.    இதுகுறித்து அதிகாரிகளிடமும் புகார் செய்துள்ளோம். ஆனால்  நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களின் எதிர்ப்பையும் மீறி கடையை திறந்தால் உள்ளே புகுந்து அதனை அடித்து நொறுக்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,shop protest ,protesters ,Tasmag , Condemning, Women,Tasmag shop,60 arrested
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது