பெங்களூரு: மறைந்த அம்பரீஷின் மனைவி சுமலதா பற்றி அமைச்சர் எச்.டி.ரேவண்ணா இழிவாக பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பகிரங்க மன்னிப்பு கேட்பதாக முதல்வர் குமாரசாமி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் மஜத.வினர் குறியாக கொண்டிருப்பது ஹாசன், மண்டியா, ராம்நகர் ஆகிய தொகுதிகளாகும். ஹாசன் தொகுதியை முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது பேரனும், அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல்லுக்கு வரும் தேர்தலில் விட்டுக் கொடுக்க முடிவு செய்தார். இதேபோல், மண்டியா தொகுதியில் முதல்வர் குமாரசாமி தனது மகன் நிகில் கவுடாவை நிறுத்த முடிவு செய்துள்ளார். அம்பரீஷ் இறந்துவிட்ட நிலையில், வரும் நாடாளுமன்ற ெதாகுதியில் அம்பரீஷின் மனைவி சுமலதா, இத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். சுமலதா போட்டியிடுவதால் குமாரசாமியின் மகன் நிகில் கவுடாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதற்காக மஜத.வினர், சுமலதாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா சுமலதாவுக்கு எதிராக சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையில் ‘‘அம்பரீஷ் இறந்த ஒன்று இரண்டு மாதங்களுக்குள் சுமலதாவுக்கு பதவி ஆசை வந்துவிட்டது. கணவன் இறந்ததையும் மறந்து தேர்தலில் நிற்க முடிவு செய்தது கண்டனத்திற்குரியது’’ என்றார். இதற்கு பாஜ.வினர் மற்றும் மண்டியா மக்கள் மட்டும் இன்றி மாநிலம் முழுவதும் கண்டனக்குரல் எழுந்தது. இதன் இடையே நேற்று முதல்வர் குமாரசாமி அளித்த பேட்டியில், ‘‘எங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் பெண்களை எந்த கட்டத்திலும் இழிவாக பேசியதில்லை. ஆனால், அமைச்சர் எச்.டி.ரேவண்ணா சுமலதாவை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஏன் அப்படி பேசினார், எந்த சூழ்நிலையில் பேசினார் என்பதை நீங்களாகவே அவர் பேசிய வீடியோவை பார்த்தால் தெரிந்துவிடும். ரேவண்ணா பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக எங்கள் குடும்பத்தின் சார்பில் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சுமலதாவை ரேவண்ணா இழிவாக பேசியதற்கு ரேவண்ணாவே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இல்லை. ஒரு மாநில முதல்வராக இருந்துகொண்டு ரேவண்ணா பேசியதற்காக நானே மன்னிப்பு கேட்கிறேன்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி