×

‘தென்னையை பெத்தா இளநீரு, பிள்ளையை பெத்தா கண்ணீரு...’வயது முதிர்ந்த தந்தையை பரிதவிக்கவிட்ட மகன்கள்

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வீரபத்திர முதலியார் நகராட்சி பூங்கா நடைபாதை ஓரத்தில் முதியவர் ஒருவர் கடந்த 20 நாட்களாக அனாதைபோல் படுத்திருந்தார்‌. அவருக்கு அந்த வழியாக செல்பவர்கள் சிலர் உணவு பொட்டலங்கள், தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்களை வாங்கி கொடுத்து வந்தனர். சுட்டெரிக்கும் வெயிலிலும் அந்த முதியவர் தவழ்ந்து தவழ்ந்து உணவை சாப்பிட்டு, ஒரே இடத்தில் இயற்கை உபாதைகளை கழித்துக்கொண்டு இருந்து வந்தார். இதனால் மயங்கிகிடந்த அவரை அதிகாரிகள் மீட்டு  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சிகிச்சைக்கு பிறகு அவருக்கு சுயநினைவு திரும்பியது. அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த பாஸ்கரன்(80), அவரது மனைவி குப்பம்மாள். இவர்களுக்கு லலிதா என்ற மகளும் 4 மகன்களும் உள்ளனர். தனது பிள்ளைகள் கவனிக்காமல் இப்படி என்னை சாலையில் வீசி விட்டு சென்றனர் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையடுத்து சிகிச்சைக்கு பின்னரும் யாரும் உதவ முன்வராததால் மீண்டும் அவர் நகராட்சி பூங்கா எதிரே அல்லாடி கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவரது பிள்ளைகளுக்கு போலீசாரும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் போன் மூலம் தெரிவித்தனர்.
ஆனால், ‘அவர் யாரென்று எங்களுக்குத் தெரியாது. எங்களை அவர் இரக்கமே இல்லாமல் நடுத்தெருவில் விட்டு விட்டு சென்றவர். இன்று அவர் அனுபவிக்கிறார்’ என்று ஓரிரு வார்த்தைகள் கூறி போனை துண்டித்து விட்டார்களாம். ‘தென்னையை பெத்தா இளநீரு, பிள்ளையை பெத்தா கண்ணீரு...’ என்ற சினிமா பாடல் வரிகளை நினைவுபடுத்தும் வகையில் நடந்துள்ள இச்சம்பவத்தில் முதியவரை காப்பாற்ற அவரது மகன்கள் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sons ,Petta Teetha Tea , Coconut, tender, child, age, father, sons
× RELATED காங்கயத்தில் 126 வயது மூதாட்டி மரணம்