சென்னை: டிடிவி.தினகரன் எம்எல்ஏ அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது 20 ரூபாய் நோட்டுகளை வீசியும் கிழித்தும் எறிந்தனர். வடசென்னை அதிமுக சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு, வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். இதில் நலத்திட்ட உதவிகள் வாங்குவதற்காக 100க்கு மேற்பட்ட பெண்கள் வந்திருந்தனர். திடீரென இவர்கள், இரட்டைக்குழி தெருவில் உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் 20 ரூபாய் நோட்டுகளை காண்பித்து, ‘ஓட்டுக்காக 20 ரூபாய் கொடுத்து ஏமாற்றிய டி.டி.வி.தினகரன் ஒழிக’ என்று கோஷங்களை எழுப்பினர். ஆவேசம் அடைந்த பெண்களில் சிலர், 20 ரூபாய் நோட்டுகளை எம்எல்ஏ அலுவலகத்துக்குள் வீசினர். பின்னர் அந்த நோட்டுகளை கிழித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதன்பிறகு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கடந்த மே மாதம் தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் முருகன் கோயில் திருவிழாவுக்கு டிடிவி.தினகரன் வந்தபோது 20 ரூபாய் நோட்டுகளை காண்பித்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காசிமேடு மக்களை சந்திக்க வந்தபோதும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்த டிடிவி.தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கோஷம் போட்டதால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது, கற்கள், செருப்பு வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் பெண் இன்ஸ்பெக்டரின் மண்டை உடைந்தது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி