கலிபோர்னியா: இந்தியா சார்பில் விளையாடும் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வன் பிஎன்பி பாரீஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அடுத்தடுத்து 3 சுற்றுகளில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பின்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இண்டியன் வெல்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் பங்கேற்றுள்ளார். இவர் முதல் சுற்றில் உலக தர வரிசைப் பட்டியலில் 69 இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் பெனாய்ட் பைரேவை 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். பிரஜ்னேஷ் தர வரிசைப் பட்டியலில் 97வது இடத்தில் இருக்கிறார்.
தொடர்ந்து 2வது சுற்றில் தர வரிசைப் பட்டியலில் 168 இடத்தில் இருக்கும் இத்தாலியின் சல்வடோரே காரூசோவை 6-2, 3-6, 6-2 என்ற செட்களில் வென்றார். தொடர்ந்து 3வது சுற்றில் பிரஜ்னேஷ் தகுதிப்பட்டியிலில் 132வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜாசன் ஜங்கை 7-5, 6-4 என்ற நேர் செட்களில் சாய்த்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளார். இந்திய நேரப்படி இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறும் அந்தச் சுற்றில் பிரஜ்னேஷ், உலக தர வரிசைப்பட்டியலில் 17வது இடத்தில் இருக்கும் ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாசலியை எதிர்த்து விளையாடுகிறார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி