மேலூர்: அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சீர் வரிசையாக பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலி, பேன் போன்றவற்றை நேற்று வழங்கி சிறப்பு செய்தனர். மேலூர் அருகில் உள்ள வடக்குவலையபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பணியாற்றும் 10 ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தி, போட்டி தேர்வுகள், சதுரங்க போட்டிகள், கம்ப்யூட்டர் போட்டிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் மாணவர்கள் பல பரிசுகளை பெறும் வகையில் செயல்பட்டனர். இந்நிலையில் நேற்று சருகுவலையபட்டி முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.31 ஆயிரம் செலவில் கலர் பிரிண்டர், ஆசிரியர்களுக்கான 10 மேஜைகள் ஆகியவற்றை சீர் வரிசை போல் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை சத்தியபாமா கூறுகையில்,‘‘ எங்கள் மாணவர்களுக்கு கல்வியுடன், போட்டி தேர்வுக்கு தயாராவது, சதுரங்கம், கம்ப்யூட்டர் போட்டிகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி அளிக்கிறோம்.பெற்றோர் ஆசிரியர்களின் உறவு சீராக உள்ளதால், எங்களை ஊக்குவிக்கும் வகையில் கிராம மக்களின் பங்களிப்பு எங்களுக்கு அதிகமாக உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் பல இடங்களிலும் குறைந்து வரும் நிலையில் எங்கள் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து தற்போது 274 மாணவர்கள் படித்து வருகின்றனர்’’என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி