வாரணாசி : வாரணாசியில் வளர்ச்சி பணிகள், நகரை அழகுபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு உ.பி.,யில் ஆட்சி செய்த சமாஜ்வாதி அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து கோவிலில் வளாகத்தில் விரிவாக்க கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உ.பி.,யில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி அரசு, மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பின்னர் தான், வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டன.
முந்தைய அரசு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், தற்போது இந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு பதில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் என்று கூறினார். காசி விஸ்வநாதர் கோவிலில் பணிகள் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு என்றும், அரசியலில் இல்லாத போதும் இங்கு பலமுறை வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இங்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நான் எண்ணியதால், முதல்முறையாக பழமையான கோவில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கோவிலில் வளர்ச்சி பணிகளுக்காக தங்களது உடைமைகளை அளித்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவித்தார். மேலும் நவீன தொழில்நுட்பம் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் கோவில்களை காப்பதற்கும், புனரமைப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் என்றும், இது, உலகளவில் காசிக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
பெண்களுக்கு வாழ்த்து
பின்னர் சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிகுழுவினருக்கு பிரதமர் மோடி பரிசுகள் வழங்கினார். பின்னர் பேசிய மோடி, அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு எனது பெண்கள் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். புதிய இந்தியாவை உருவாக்குவதில் நீங்கள் முக்கிய பங்காற்றுகிறீர்கள். புதிய இந்தியாவின் புதிய கலாசாரத்தை உருவாக்குவதில், உங்களின் ஆசியும் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது என கூறினார். மேலும் சமீபத்தில் ராணுவத்தில் சில துறைகளில் பெண்களை சேர்த்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி