×

ஊழல் பெருச்சாளிகள் நுழைவதற்கு ஒரு தொகுதியிலும் இடம் தரக் கூடாது ஆட்சியாளர் ஊழலுக்கான ஆதாரங்கள் தேர்தல் களத்தில் அணிவகுக்கும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கு இன்னும் ஆதாரங்கள் ஏராளமானவை இருக்கின்றன. அத்தனையும் தேர்தல் களத்தில் அணிவகுத்து வெளிச்சத்திற்கு வந்தே தீரும். ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைவதற்கு ஒரு தொகுதியிலும் இடம்தரக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக வரலாற்றில் கலைஞர் நம்மிடையே இல்லாமல் நாம் சந்திக்கிற முதல் தேர்தல் களம் இது. கலைஞர் எப்படி குழுக்கள் அமைத்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்திடுவாரோ அதே நடைமுறைப்படி தொகுதிப் பங்கீடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தொகுதி உடன்பாடு தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தையும் ஊர் அடங்கிய பிறகு யாருக்கோ சொந்தமான மர்ம மாளிகையில் திரைமறைவில் நடக்கவில்லை. நட்சத்திர ஓட்டலில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. பொதுக்கூட்ட மேடை ஏறுவதற்கு முன்பாக ஒப்பந்தம் போட்டு எப்படியாவது இழுத்து வந்து மேடையேற்ற வேண்டும் என்று திட்டமிடப்படவில்லை.

கட்அவுட்டை வைப்பதும் எடுப்பதுமாக கேலிக்கூத்துகள் இல்லை. ஏனெனில், திமுக கூட்டணி என்பது ஊழல் ஆதராங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு ரெய்டு பயம் காட்டி மிரட்டி அமைக்கப்பட்ட செயற்கைக் கூட்டணி அல்ல. மத்தியிலும் மாநிலத்தி லும் உள்ள மக்கள் விரோத ஜனநாயக விரோத ஆட்சியாளர்களை விரட்டி அடிக்கிற கூட்டணி.  இந்திய தேசிய காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள், மதிமுகவிற்கு 1 மக்களவை தொகுதி, 1 மாநிலங்களவைத் தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி, இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி என 20 தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுவதென ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன. மார்ச் 6ம் நாள் விருதுநகர் மண்ணில் நடந்த தமிழகத்தின் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணியில் திரண்டிருந்தது மகத்தான மக்கள் வெள்ளம். கடல் காணா விருதுநகரில் மனிதத் தலைகளே கடல் அலைகளாக அற்புதக் காட்சி அளித்து அழிக்க முடியாத சாட்சிகளாக நின்றன.

அதே நாளில் பிரதமர் மோடி பங்கேற்ற கட்டாயக் கூட்டணியின் பொருந்தாக் கூட்ட ணியின் பொதுக்கூட்டம் சென்னை அருகே நடைபெற்றது. அங்கு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டதை நாடு பார்த்தது நகைத்தது. 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் வழங்க விருக்கும் ஜனநாயகத் தீர்ப்பு மத்தியில் ஆளப் போவது யார் என்பதை தீர்மானிப்பது மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திடமாக இருக்கிறார்கள். தங்களை வாட்டி வதைக்கிற மத்திய, மாநில ஆட்சியாளர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்பதில் வேகமாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள். மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை உங்களின் கரங்களில் இருக்கிறது. 8 ஆண்டுகளாக திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லை. நம் கையில் அதிகாரம் இல்லை. ஆனாலும், ஆட்சியாளர்கள் தங்கள் திறனைக் காட்டத் துப்பின்றி நம் மீது சகதி வாரி அடிக்கப் பார்க்கிறார்கள். ஏனென்றால், அவதூறுகளைப் பரப்பியாவது ஆட்சியதிகார த்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பதவி வெறிதான் அவர்களைப் பொய்யிலே ஊற வைத்த புளுகு மூட்டைகளாக்கியிருக்கிறது.

20 தொகுதிகளில் திமுக நிற்கிறது. மீதி 20 தொகுதிகளிலும் திமுக தான் நிற்கிறது. அந்த சீரிய எண்ணம்தான் கலைஞர் நமக்கு ஊட்டியுள்ள தோழமை உணர்வு. 40 தொகுதிக ளிலும் நமது கூட்டணியை எதிர்த்து நிற்பவர்கள் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் அவர்களின் பங்குதாரர்கள். அந்த ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைவதற்கு ஒரு தொகுதியிலும் இடம் கொடுத்துவிடக் கூடாது. அதுபோலவே, சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் 21 தொகுதிகளிலும் நாம் பெறப் போகும் வெற்றி, ஒவ்வொருவர் வாழ்விலும் உதயசூரியனின் வெளிச்சக் கதிர்களை பாய்ச்சப் போகிற வெற்றி. கதிரொளி பாய்ந்தால் வளம் பெருகும். நாடு ஒளிமயமாகும். அந்த உயரிய எண்ணத்தோடு, ஓயாத உழைப்போடு உறுதியான உள்ளத்தோடு பணியா ற்றிடுவோம். களம் அழைக்கிறது; காலம் நமக்கானது. கலைஞர் காட்டிய வழியில் ஈட்டிடுவோம் வெற்றியை நாற்பதும் நமதாகட்டும் நாடு நலம் பெறட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ruler scandal ,MK Stalin , Corruption scandals, ruler corruption, evidence election, mkstallin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...