மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மாயமான இந்திய வம்சாவளி பெண் மருத்துவர், உடலில் சரமாரி கத்திக்குத்து காயங்களுடன் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்தவர் பிரீத்தி ரெட்டி (32). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், பல் மருத்துவராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் செயின்ட் லியோனார்ட்டில் நடந்த பல் மருத்துவர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரீத்தி ரெட்டி, பின்னர் வீடு திரும்பவில்லை. கடைசியாக அவர் கடந்த ஞாயிறன்று காலை 11 மணிக்கு குடும்பத்தினருடன் போனில் பேசி உள்ளார். அப்போது, காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு விடுவதாக கூறிய அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில், பிரீத்தி ரெட்டியின் கார் நியூ சவுத் வேல்சின் வெஸ்டர்ன் சிட்னி தெருவில் நிற்பதை போலீசார் நேற்று கண்டனர். காரில் இருந்த சூட்கேசை போலீசார் திறந்து பார்த்தபோது,
உடலில் சரமாரி கத்திக்குத்து காயத்துடன் பிரீத்தி ரெட்டி சடலமாக கிடந்துள்ளார். போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பிரீத்தி ரெட்டியுடன் பல் மருத்துவ மாநாட்டில் அவரது முன்னாள் காதலர் ஹர்ஷ் நர்தேவும் பங்கேற்றுள்ளார். பல் மருத்துவரான அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பிரீத்தி மாயமானது குறித்து ஹர்ஷிடம் போலீசார் விசாரித்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு ஹர்ஷ், நியூ இங்கிலாந்து நெடுஞ்சாலையில் கார் விபத்தில் பலியாகி உள்ளார். சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரித்ததில், பிரீத்தி கடைசியாக கடந்த ஞாயிறன்று, செயின்ட் லியோனார்ட், ஜார்ஜ் தெருவில் பிரபல ஓட்டலில் 2 தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு பக்கத்து தெரு வழியாக சென்றுள்ளார். அவர் தனக்கு தெரிந்த ஒரு நபருடன் ஓட்டலில் தங்கியிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பிரீத்தி ரெட்டியை யார் கொலை செய்தது, முன்னாள் காதலனுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி