சென்னை: கள்ளக்காதல் கொலைகள் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை நடந்துள்ளது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை அண்ணாநகரில் ரஞ்சித்குமார் என்பவர் ரவுடிகளால் 2017ல் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அயனாவரம் போலீசார் லோகேஷ், வேலு, சுரேஷ், அஜித்குமார், செய்யது அப்பாஸ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் கள்ளத்தொடர்பு விவகாரம் காரணமாக இக்கொலை நடந்துள்ளது தெரிந்தது. இந்நிலையில், தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்யக்கோரி லோகேசின் கூட்டாளி அஜீத்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கில் அஜீத்குமாரின் மனு ஏற்கப்படுகிறது. அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில், சமூகத்தை கடுமையாக சீரழித்து வரும் ஒரு விஷயத்தை நாம் விட்டுவிட முடியாது. சமீப காலமாக கள்ளத்தொடர்பு காரணமாக பல்வேறு குற்றச்செயல்கள் நடப்பது அதிகரித்துள்ளது. திருமண வாழ்வில் உள்ள அர்ப்பணிப்பு, காதல், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல் போன்றவை தற்போது குறைந்துவிட்டது. வெளிநபருடன் தொடர்பு ஏற்பட்டு குடும்பத்தில் குழப்பத்தையும், நிம்மதியின்மையையும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, கள்ளத்தனமான உறவுகளால் ஏற்படும் பிரச்னை, அதை தடுக்க என்ன வழி போன்றவற்றை ஆய்வு செய்து ஒரு தீர்வை ஏற்படுத்த இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு இந்த நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்புகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட கொலைகள் எத்தனை, பெண்ணுக்கும், ஆணுக்கும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினர் திருமணம் செய்துவைப்பதும் இதுபோன்ற தவறான உறவுக்கு காரணமாகியுள்ளதா என்்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு ஜூன் 3வது வாரம் தமிழக அரசு பதில் தரவேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி