×

கோவை மதுக்கரை அருகே யானை தாக்கி முதியவர் பலி

கோவை: கோவை மதுக்கரை அருகே குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் குடிக்க வந்த யானை தாக்கியதில் முதியவர் பலியானார். கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட நவக்கரை, எட்டிமடை, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில்  தண்ணீர், உணவு தேவைக்காக ‘’வீடு முட்டி’’ என அழைக்கப்படும் குட்டியுடன் கூடிய பெண் யானை கடந்த சில வாரங்களாக சுற்றி வருகிறது. நேற்று அதிகாலை 2 மணியளவில் காந்திநகர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி(63) என்ற மாற்றுத்திறனாளியின் வீட்டின் முன்பு இருந்த பிளாஸ்டிக் தொட்டியில் தண்ணீர்  குடித்தது. இதனை வீட்டின் திண்ணையில் படுத்திருந்த வேலுச்சாமி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட்டதாக தெரிகிறது.

இதில், ஆத்திரமடைந்த பெண் யானை, வேலுச்சாமியை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மதுக்கரை வனத்துறை முதியவரின் உடலை மீட்டு, பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு குழுவினர் யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானை தாக்கி உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக 50 ஆயிரத்தை வனத்துறையினர் நேற்று வழங்கினர். மேலும், இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியில், திண்ணையில் படுக்க வேண்டாம் என வனத்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elephant kills elephant ,Coimbatore , Coimbatore, elephant,old man killed
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...