×

விஸ்வரூபம் எடுக்கிறது பொள்ளாச்சி விவகாரம்: மாணவிகளை மயக்கி 9 ஆண்டாக உல்லாசம் அனுபவித்த கும்பல்: குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது

பொள்ளாச்சி: மாணவிகள் உள்பட பெண்களை மயக்கி 9 ஆண்டுகளாக உல்லாசம் அனுபவித்து வந்த கும்பலிடம் போலீஸ் விசாரணை தொடர்கிறது. குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஜோதிநகர் எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்த சபரிராஜன் (25) என்பவர் கடந்த 12ம் தேதியன்று, பேஸ்புக் நண்பராக பழகி வந்த ஒரு கல்லூரி மாணவியை ஊஞ்சவேலாம்பட்டிக்கு அழைத்ததுடன், காரில் இருந்தபடி அந்த மாணவியின் ஆடைகளை விலக்கியுள்ளார். உடன் இருந்த சபரிராஜனின் நண்பர்கள் படம் பிடித்து, இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இதையடுத்து, அந்த மாணவி, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில், சபரிராஜன் மற்றும் அவரது நண்பர்களான, சதீஸ் (28), வசந்தகுமார் (24) ஆகியோரை கைதுசெய்தனர். இந்த வழக்கில், முதல் குற்றவாளியான பைனான்சியர் திருநாவுக்கரசு (27) தலைமறைவானார். மேலும், மாணவியின் சகோதரனை தாக்கிய வழக்கில், திருநாவுக்கரசின் நண்பர்களான செந்தில், பாபு, வசந்த், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசுவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களான, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் அனைவரும், கல்லூரி மாணவி மற்றும் பள்ளி மாணவிகளின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து நட்பாக பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளனர். அப்படி சிக்கும் பல கல்லூரி மாணவிகளை சின்னம்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் தோட்டத்து வீட்டிற்கு அழைத்துச்சென்று, ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். இப்படி திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 9 ஆண்டுகளாக, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் பலரை மயக்கி நாசப்படுத்தியதுடன், அவர்களை ஆபாச படம் எடுத்தும் மிரட்டியுள்ளனர். இதுவரை, 150க்கும் மேற்பட்ட வீடியோக்கள் எடுத்துள்ளனர். பல பெண்கள், இந்த கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  தற்போது கைதாகி சிறையில் உள்ள குற்றவாளிகள் மீது பெண்கள் யாரேனும் புகார் அளிக்கும்பட்சத்தில், தேவைப்பட்டால் குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம்.

இக்கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்கள், தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்த வீடியோக்கள், செல்போன் அல்லது நவீன கை கேமரா கொண்டு எடுக்கப்பட்டதா? என ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.   இவ்வழக்கில், பல்வேறு கோணங்களில் விசாரித்தபோது, பல பெண்களை இக்கும்பல் சீரழித்தது தெரியவந்துள்ளது. இக்குற்றச்செயலுக்கு மூளையாக செயல்பட்ட திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் விரைவில் பாயும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர். போலீசிடம் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு: கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்தேன். இங்கு படிக்கும்போது பெண்கள் மீதான மோகம் அதிகமானது. அதே கல்லூரியில் படிக்கும் பல மாணவிகளிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.

பெண்கள் மீது ஏற்பட்ட மோகத்தால், அவர்களிடம் இருந்து போன் நம்பரை வாங்கி, செல்போனில் நல்லவன்போல் பேச தொடங்கினேன்.  எனது நண்பர்கள் சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து பல பெண்களை மடக்கினோம். ஒரு பெண்ணை மடக்க, மற்றொரு பெண்ணை பயன்படுத்துவோம். நானும், சபரிராஜனும் பெண்களை மயக்கி, தோட்டத்து வீட்டிற்கு தனியாக அழைத்து வந்து தனிமையில் இருப்பது போன்ற வீடியோக்களை மறைந்திருந்து எடுத்துள்ளோம். அவ்வாறு எடுத்த வீடியோ மற்றும் ஆபாச படங்களை கொண்டு, மீண்டும் எங்களின் ஆசைக்கு இணங்க வைப்போம். இப்படி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பெண்ணின் ஆபாச படத்தை காட்டி மிரட்டியபோதுதான் போலீசில் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். விஸ்வரூபம் எடுக்கும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mobster ,affair ,Pollachi , Pollachi affair, students, fun criminals, thief law on 4 people
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!