ஈரோடு: சொத்துக்களை அபகரித்ததாக முதியோர்கள் அளித்த புகாரின்பேரில் மூத்த குடிமகன்கள் பராமரிப்பு சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு பராமரிப்பு நிதி மற்றும் சொத்து பத்திரங்களை பெற்று தந்து ஈரோடு கலெக்டர் கதிரவன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் வீரப்பம்பாளையம் விவேகானந்தர் சாலையை சேர்ந்த வள்ளியம்மாள் (81). இவருக்கு ஐந்து மகன்கள். ஆனால், 5 மகன்ளும் இறந்து விட்டனர். மகன் வழி பேரன்களான சுரேஷ், ராஜகோபால் ஆகியோர் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். வள்ளியம்மாளுக்கு சொந்தமாக மாடி வீடு ஒன்று இருந்துள்ளது. இந்த வீட்டை பேரன்கள் இருவரும் தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டனர். பின்னர், வள்ளியம்மாளின் சொத்தை பறித்துக்கொண்டு, அவரை பராமரிக்காமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர்.
இதுகுறித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வள்ளியம்மாள் புகார் அளித்தார். இதேபோல், ஈரோடு மாவட்டம் நச்சினார்கினியர் வீதியை சேர்ந்த சித்தையன் மனைவி சரஸ்வதி (60). இவரது மகன் பிரபாகரன். வங்கியில் கடன் வாங்குவதாக கூறி சரஸ்வதி பெயரில் இருந்த சொத்தை தான செட்டில்மென்ட் பத்திரத்தில் எழுதி வாங்கி, சரஸ்வதியை ஏமாற்றி சொத்தை பறித்து கொண்டார். இதனையடுத்து, சரஸ்வதி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007ன் படி விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு டிஆர்ஓ கவிதாவிற்கு உத்தரவிட்டார். டிஆர்ஓ கவிதா விசாரணை நடத்தி, வள்ளியம்மாளின் பேரன்கள் இருவரும் தலா 2 லட்சம் வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இதில், முதற்கட்டமாக வள்ளியம்மாளின் பேரன்கள் இருவரும் சேர்ந்து 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அளித்தனர்.
சரஸ்வதி அளித்த மனுவின்பேரில் விசாரணை நடத்தியதில், சரஸ்வதியின் மகன் நேரில் ஆஜராகவில்லை. இதனால் சரஸ்வதியிடம் இருந்து அவரது மகன் பெற்ற தான பத்திரத்தை ரத்து செய்து டிஆர்ஓ கவிதா உத்தரவிட்டார். இதையடுத்து மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007ன்படி எடுத்த நடவடிக்கை மூலம் வள்ளியம்மாளின் பேரன்கள் வழங்கிய 2 லட்சத்திற்கான காசோலையும், சரஸ்வதியின் தானபத்திரம் ரத்து செய்த உத்தரவும் அவர்களிடம் நேற்று கலெக்டர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி